புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வல சர்ச்சை வரை 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
செப்டம்பர் 5; அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. புதுமைப் பெண் என பெயரிடப்பட்ட இத்திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 7; 2024 மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி இந்திய ஒற்றுமை பாதயாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். வகுப்புவாதம், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் தொடர்பான பிரச்னைகள் இந்த பயணத்தின்போது ராகுல்காந்தியால் முன்வைக்கப்பட்டன.
செப்டம்பர் 13; அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 253 கட்சிகள் செயல்படாதவை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தரின் லட்சிய திமுகவையும் செயல்படாத கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
செப்டம்பர் 15: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தால் 1.14 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
செப்டம்பர் 20; திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். விலகுவதற்கு சில காலம் முன்பு தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார்.
செப்டம்பர் 21; முன்னாள் சபாநாயகரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நல குறைவால் காலமானார். 1991- 91 ஆண்டு காலத்தில் சபாநாயகராக இருந்த இவர், 1999 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
* எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். ஆனால், தனக்கு ஆதரவாக 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் தாக்கல் செய்தது.
செப்டம்பர் 26: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னதாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் அரசு கருத்து கேட்ட நிலையில், சூதாட்டத்தைத் தடைசெய்ய யாராவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவார்களா? என இபிஎஸ் விமர்சித்தார்.
செப்டம்பர் 28; சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. முன்னதாக தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டது. இதன் எதிரொலியாக பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் துறை அறிவித்தது.
செப்டம்பர் 29; காந்தி பிறந்தநாளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவுள்ளதாக ஆர்எஸ்எஸ் அறிவித்த நிலையில், அதற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் அறிவித்தன. என்றாலும் சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கும், மனித சங்கிலி போராட்டத்திற்கும் அனுமதி மறுத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.