விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியே இருந்துவருகிறது. இருப்பினும், பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்து தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் வெடி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார். வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தது இந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.