விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில், குடியிருப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மேலத்தெரு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடைகளை அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு மாற்றுவதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அந்தப் பகுதியில் கோவில் மற்றும் பெண்கள் பொதுக்கழிப்பிடம் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், டாஸ்மாக் கடையை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், டாஸ்மாக் மதுக்கடை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
Must Read : ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பிரச்னை குறித்து விளக்கம் கொடுத்த உணவுத்துறை அமைச்சர்
மேலும், மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : கணேஷ்நாத்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.