விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையனாம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள் (52). இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில், இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இரண்டு மகன்கள் கல்லூரிப் படிப்பு படித்து வருகின்றனர்.
ராக்கம்மாளின் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வரும் நிலையில், அவரின் அக்கா மகளான சோலைமணியை ராக்கம்மாள் பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சோலைமணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் ராக்கம்மாள் திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சோலைமணி கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மூர்த்தியை விட்டு பிரிந்துள்ளார். இதற்கு காரணம் ராக்கம்மாள் தான் என நினைத்து மூர்த்தி பலமுறை ராக்கம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த மூர்த்தி நேற்று மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்து எனது மனைவி என்னை விட்டு பிரிவதற்கு காரணம் நீ தான் எனக்கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 15 க்கும் மேற்பட்ட இடங்களில் ராக்கம்மாளை குத்தியதுடன், சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராக்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வழக்கில் சம்பந்தப்பட்ட மூர்த்தி உட்பட 5 நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், குச்சம்பட்டிபுதூர் அருகே மூர்த்தி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Must Read : சென்னை அருகே ஒரு தீண்டாமை சுவர் - குமுறும் கிராம மக்கள்...
இந்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற திருச்சுழி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டிபன் தலைமையிலான போலீசார் மூர்த்தி மற்றும் அவரது சகோதரர் வெற்றிசெல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள முத்துராஜ், லட்சுமி, சபரி ஆகிய மூன்று நபர்களையும் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : கணேஷ்நாத், விருதுநகர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.