மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவிற்கு அவரது கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில் கடந்த 1942ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி சண்முகநாதன் திருக்கண்ணமங்கை வடக்கு வீதி பகுதியில் உள்ள அவரது வீட்டில் பிறந்தார். இவரது தந்தை கோதண்டபாணி. சண்முகநாதன் திருவாரூரில் உள்ள வாசோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
அதனையடுத்து 1965ஆம் ஆண்டு திருக்கண்ணமங்கை இல் இருந்து சென்னைக்கு சென்ற சண்முகநாதன் காவல்துறையில் சுருக்கெழுத்து பணியாற்றி வந்துள்ளார். சண்முகநாதனுக்கு யோகலட்சுமி என்ற மனைவியும் 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து காவல்துறையில் பணியாற்றி வந்த சண்முகநாதன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1969ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி கருணாநிதியின் உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். சண்முகநாதன் பணியில் சேர்ந்த நாளிலிருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இறக்கும்வரை 50 ஆண்டு காலமாக அவரின் உதவியாளராகவே இறுதி வரை பணியாற்றினார்.
கருணாநிதியின் அரசியல் நிகழ்ச்சிகள், சொந்த நிகழ்ச்சிகள், மற்றும் அரசு நிகழ்ச்சிகள் எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அனைத்து இடங்களுக்கும் அவருடன் செல்லும் ஒரே நபர் சண்முகநாதன். குறிப்பாக சண்முகநாதன் சுருக்கெழுத்து எழுதுவதில் மிகுந்த திறமை படைத்தவர்.
முதலமைச்சர் ஆவதற்கு முன்பு கருணாநிதி அரசியல் மேடையில் பேசிய பேச்சை காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது சண்முகநாதன் அதனை தெளிவாக குறிப்பு எடுத்துள்ளார். அதன் பிறகுதான் கருணாநிதிக்கு சண்முகநாதன் பற்றிய தகவல் கிடைத்துள்ளது அதனடிப்படையில் சண்முகநாதனை தனது உதவியாளராக பணியில் அமர்த்தியவர் கருணாநிதி என சண்முகநாதன் தொடர்ந்து தனது கிராம மக்களிடையே பலமுறை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து அவரின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாகச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
Also read... கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது: சண்முகநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
அதேபோன்று அவரது சொந்த கிராமமான திருக்கண்ணமங்கையில் அவர் வாழ்ந்த வீட்டிற்கு தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சண்முகநாதன் குறித்து அவரது கிராம மக்கள் கூறும் பொழுது, அவர் பிறந்தது திருக்கண்ணமங்கை கிராமம் என்றாலும் அவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். சென்னைக்கு சென்று திருக்கண்ணமங்கை கிராமத்தில் இருந்து வருகிறோம் என்று சொன்னால் உடனடியாக எங்களை வீட்டிற்கு அழைத்து உபசரித்து நாங்கள் எந்த உதவி கேட்டாலும் உடனுக்குடன் செய்து கொடுப்பார்.
Also read... தமிழகத்தில் உள்ள அச்சகங்களை அரசு காத்திட வேண்டும் - வைகோ!
குறிப்பாக எங்கள் பகுதியில் கோவில் நிகழ்ச்சி மற்றும் வேறு எந்த உதவியாக இருந்தாலும் மறுக்காமல் உடனுக்குடன் செய்து கொடுப்பவர் சண்முகநாதன். எங்கள் பகுதியில் ஏராளமானோர் இன்று அரசு மற்றும் தனியார் பணியில் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் சண்முகநாதன்.
Also read.. ஒரே நிகழ்வில் பங்கேற்றும் சந்தித்துக்கொள்ளாத மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி
மேலும் கருணாநிதியின் உண்மை விசுவாசியாக அவர் வாழ்ந்த காலம் முழுவதும் அவருக்காகவே வாழ்ந்த ஒரு நபர் சண்முகநாதன். ஏற்கனவே எங்களின் மண்ணின் மைந்தர் கருணாநிதி இறந்த நிலையில் தற்பொழுது எங்களுடன் வாழ்ந்த சண்முகநாதன் மறைந்திருப்பது எங்களை துயரில் ஆழ்த்தியுள்ளது என கிராம மக்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.