தே.மு.தி.க தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சூசகம்
தே.மு.தி.க தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சூசகம்
சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க தலைமையில் மூன்றாவது அணி அமையவாய்ப்பு உள்ளது என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையில் போட்டியிட்ட கூட்டணி தற்போது அதே நெருக்கத்துடன் இருந்துவருகிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் நெருக்கத்துடன் இல்லை. எனவே, தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் அல்லது விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா? என்ற எதிர்பார்ப்பும் இருந்துவருகிறது.
இந்தநிலையில், மதுரை காளவாசல் அருகே தே.மு.தி.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தி.மு.க, அதி.மு.கவுக்கு மாற்றுதான் தே.மு.தி.க என்று பார்க்கப்பட்டது. சூழலின் காரணமாக கூட்டணி வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. காலத்தின் சுழலில் கட்சி எப்படி பலம் பெறுமோ அதற்கேற்றாற் போல பயணிப்போம்.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. அதனால், அனைவருக்குமே இது முதல் தேர்தல்மாதிரிதான். எல்லாருக்கும் அனுபவம் இருக்கலாம். ஆனால், தலைவராக, தனித்துவமாக இதுதான் முதல்தேர்தல். அதனால், நான் பெரியவர், நீ பெரியவர் என்று யாரும் பேச முடியாது. தே.மு.தி.க தலைமையில் மூன்றாவது அணி அமையவாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.