டெல்லியில் தமிழ் மொழிக்கு அகாடமி அமைத்திருக்கும் அம்மாநில அரசைப் பாராட்டியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
டெல்லி துணை முதல்வரும் கலை கலாசார மொழித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்ப டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்கப்படும். இதன் தலைவராக டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர், முன்னாள் கவுன்சிலர் என். ராஜா நியமிக்கப்படுகிறார். தமிழ் அகாடமிக்கான இடம், அலுவலகம் ஆகியவை விரைவில் உருவாக்கப்படும். இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு விருதுகள் வழங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ்சிசோடியா இருவர்க்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.