புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய பாஜக நிர்வாகியின் ட்விட்டர் பதிவு கடுமையான செயல் என்றும், பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதாக உத்தர பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் பிணை வழங்ககோரி, பிரசாந்த் உம்ரா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால பிணை வழங்க முடியாது என்றும், தமிழகத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், முன் ஜாமீன் வழங்ககோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனுதாக்கல் செய்தார். அதில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த குறிப்பிட்ட ட்விட்டர் வீடியோவை தான் உருவாக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த ட்விட்டர் வீடியோவை பார்வேர்ட் செய்தவர் யார்? என்று கூட தனக்கு தெரியாது எனக் கூறிய மனுதாரர், இருமாநிலத்தினரிடையே எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவமோ அல்லது மோதல்களோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்புநிதி, பிரசாந்த் குமாரின் செயலால், இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது என்றும், மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிட்டார். மேலும் மனுதாரரின் ட்விட்டர் பதிவை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர் எனவும் கூறினார்.
இதை கேட்ட நீதிபதி, மனுதாரரின் ட்விட்டர் பதிவால், புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதாக கூறினார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிருக்கும், உடமைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவானதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதனை கடுமையான செயலாக பார்க்கப்படுவதாக கருத்து தெரிவித்த நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட எஸ்,பி. பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.