பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்ததது என்பதை முழுமையாக பார்போம். மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 31 ஆம் தேதி சாலிகிராமம் தசரதபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி களான கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக எம்எல்ஏ பிரபாகரராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு இரண்டு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனையடுத்து பெண் காவலர் அவ்விருவர்களையும் பிடிக்க முற்படும்போது அந்த இரண்டு நபர்களும் தாங்கள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் என கூறி அந்த பெண் காவலரை கடுமையாக திட்டி உள்ளனர்.இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அந்த இரண்டு இளைஞர்களையும் துரத்தி பிடித்தார்.
விசாரணையில் அந்த இரண்டு இளைஞர்களும் 129-வது வட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளான சாலிகிராமம் சரோஜினி பாய் தெருவை சேர்ந்த பிரவீன்(23) மற்றும் சின்மயா நகர், அண்ணா தெருவை சேர்ந்த ஏகாம்பரம்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனை பார்த்த திமுக எம்.எல்.ஏ பிரபாகரராஜா மற்றும் திமுக கவுன்சிலர்கள் காவல் ஆய்வாளரை சூழ்ந்து கொண்டு தங்களது இளைஞர் அணி நிர்வாகிகள் அது போல் செய்பவர்கள் அல்ல எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக எம்.எல்.ஏ பிரபாகரராஜா வேண்டுமென்றால் எஃப்.ஐ.ஆர் போட்டு விசாரித்துக் கொள்ளுங்கள், தற்போது திமுக இளைஞரணி நிர்வாகிகளான இருவரையும் இங்கேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பெண் காவலர் புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு துணை ஆணையர் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
இரண்டு தினங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2-ம் தேதி மாலை, கூட்டத்தில் தெரியாமல் பெண் காவலர் மீது கை பட்டிருக்கலாம் என திமுக நிர்வாகிகள் கூற பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகளும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். இதனால் பெண் காவலர் தனது புகாரை வாபஸ் வாங்கினார். திமுக நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் மற்றும் காவல்துறையினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் பெண் காவலர் தனது புகாரை வாபஸ் பெற்றதாகவும் இதனால் பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் தப்ப வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பெரும் வைரலானது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்துக்கள் தெரிவிக்க இந்த சம்பவமானது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளான பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகியோரை திமுக தலைமைக் கழகம் நேற்று மாலை கட்சியை விட்டு நீக்கியது. இதனால் நேற்று நள்ளிரவு பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞரணி நிர்வாகிகளாக இருந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவரை விருகம்பாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK