கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மின்கம்பியில் சிக்கி தாய் யானை கொல்லப்பட்டதால், அனாதையாக்கப்பட்ட 6 மாத ஆண் யானைக்குட்டியை நாய்கள் கடித்து காயமாக்கின. அந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், ரகு என பெயரிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் தங்கவைத்து சிகிச்சை அளித்தனர். இதே போல், ரயில் விபத்தில் தாயை பறிகொடுத்த பொம்மி என்ற பெண் யானைக்குட்டியும் முகாம் வந்து சேர்ந்தது. இவற்றை, பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி தம்பதி பராமரித்து வந்தனர்.
அவர்களுக்கு இடையேயான பாசப்பிணைப்பை படம் பிடித்து காட்டிய The Elephant Whisperer தற்போது ஆஸ்கர் வென்றுள்ள நிலையில், இந்த பாசக்காரர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சர்வதேச புகழை எட்டியுள்ள ரகுவையும் பொம்மியையும் காண வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒரே இடத்தில் யானை வசிக்கக் கூடாது என்பதால் அவை மசினக்குடியை அடுத்த தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு ரகு செய்யும் சேட்டைகளை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
பழங்குடி மக்களையும் விலங்குகளையும் முன்னிலைப்படுத்தும் தங்கள் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிப்பதாக The Elephant Whisperer ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் கூறுகிறார். The Elephant Whisperer நமக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பைப் பற்றி பேசுவதாக கார்த்திகி கூறும் நிலையில், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை என்பதை இந்த ஆவணப்படம் மீண்டும் ஒருமுறை வலுவாக எடுத்துரைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.