ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக அனுப்பிய கடிதங்களை வாங்க மறுத்து, அதிமுக இருமுறை திருப்பி அனுப்பியது பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவை மீண்டும் நடத்தினார். இதை ஏற்காத ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இருதரப்புக்கும் இடையே அடிக்கடி வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து வரும் கடிதங்களில் குறிப்பிடும் பதவிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனிடையே, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக வரும் 16 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், குறிப்பிட்ட பதவிகளில் அதிமுகவில் யாரும் இல்லை என கூறி அக்கடிதத்தை அக்கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர். தேர்தல் ஆணையத்திடம் உள்ள தகவல்படியே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்பியதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தையும் அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் வாங்க மறுத்து, திருப்பி அனுப்பினர். இது குறித்து மின்னஞ்சல் மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரியப்படுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election Commission, Letter, OPS - EPS