தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்க கோரி மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவின்படி, தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் இன்று நேரில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி, 3 தமிழக மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளதாகவும்,
இலங்கையில் 2009 ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 50 ரூபாய் 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 1,750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் உதவிதொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன் பிடி திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாயை, மத்திய- மாநில அரசுகள் விடுவித்துள்ளது என தெரிவித்துள்ள மீன்வளத் துறை இயக்குனர், இத்திட்டத்தின் கீழ் 750 படகுகள் கட்டமைக்க உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டங்களை அமல்படுத்தியதில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.