கட்சி பாராமல் தொகுதிக்கு திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து கொடுக்கிறார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்ச மு.க.ஸ்டாலினுக்கு
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பாராட்டுத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம் ), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கேள்வி நேரத்தின் போது பாஜக சட்டபேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானுரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23 ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதை தவிர 1 அரசு பொறியியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் மற்றும் 1 அரசு உதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரியும், 14 சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இதையும் படிங்க: காலங்கள் செல்ல செல்ல பெரியார் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது: நடிகர் சிவக்குமார்
இந்த கல்லூரிகள் தொகுதி மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்வதால், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். சட்டபேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசிய போது, இந்த கேள்வி நமது அரசு வந்த உடன் முதல் முதலில் போடப்பட்டு அதை உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்தார். அதற்கு நன்றி.
ஏற்கனவே நன்றி சொல்லிட்டேன், இரண்டாம் முறை நன்றி சொல்கிறேன். அதே போல் திருநெல்வேலி நெல்லை அப்பர் கோயிலுக்கு 30 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் அறிவுறுத்தல் பெயரில் அறநிலை துறை அமைச்சர் திட்டங்கள் கொடுத்துள்ளார். அதே போல் நெடுஞ்சாலை துறை அமைச்சர் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி புறவழிச் சாலை சாலை வெகு விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் முதலமைச்சர் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நிலையம் 18 கோடி ரூபாய் திருநெல்வேலியில் அமைத்து தரப்படும் என தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து கட்சி பாராமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு திட்டங்கள் தரும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.