திருத்தணி நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த
அதிமுக வேட்பாளர் கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றதையடுத்து
திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதனால் அதிமுக வேட்பாளரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி நகராட்சியில் 18-வது வார்டு பகுதியில் அ.தி.மு.க சார்பில் வாணிஸ்ரீ என்பவர் போட்டியிட வேட்பாளராக மனு செய்திருந்தார். இதே வார்டு பகுதியில் தி.மு.க-வைச் சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம். பூபதியின் மனைவி சரஸ்வதி என்பவரும் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் திடீரென அ.தி.மு.க வேட்பாளர் வாணிஸ்ரீ தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாண்டியனிடம் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் திமுகவுக்கு எதிராக கடும் கோஷங்களை கண்டனங்களை எழுப்பினர். இதனால் திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டானது.
இதையும் படிங்க: பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்கிறார்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இந்த வார்டில் வாணிஸ்ரீ மற்றும் சரஸ்வதியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தற்போது வாணிஸ்ரீ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதுள்ளதால் திருத்தணி நகராட்சியில் 18வது வார்டில் திமுகவைச் சார்ந்த மாவட்ட செயலாளர் பூபதி மனைவி சரஸ்வதி போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.