ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த ஏரியில் கழிவு நீரை கலந்ததில் 7 டன் அளவில் ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சேக்காடு பகுதியில் பொது பணித்துறைக்கு சொந்தமான சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மீன் வளர்ப்புக்காக இந்த ஏரி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதில் சுமார் 7டன் அளவிற்கு ரோகு , கட்லா , ஏரி வவ்வா, ஜிலேபி உள்ளிட்ட நாட்டு மீன்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல குத்தகைதாரர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முறையாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறுகின்றனர். பின்னர் குத்தகைதாரர்கள் ஏரியில் இறங்கி மீன்களை அப்புறப்படுத்தினர். பின்னர் குத்தகைதாரர்களே ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் ஏரியில் செத்து மிதந்த சுமார் 7 டன் அளவிலான மீன்களை 10 அடி பள்ளம் தோண்டி மீன்களை பள்ளத்தில் போட்டு மூடி உள்ளனர். மேலும் அதிலுள்ள மீதமுள்ள மீன்களும் தற்போது செத்து மிதந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரி அருகிலுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சட்டவிரோதமாக ஏரியில் கழிவு நீரை திறந்து விட்டதால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான மீன்கள் தற்போது செத்து மிதப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக ஏரியில் கலக்கப்பட்ட கழிவு நீரை வெளியேற்றி ஏரியை முறையாக சுத்தம் செய்து, மீண்டும் கழிவு நீர் ஏரிக்குள் வராதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : கன்னியப்பன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvallur