பொன்னேரி அருகே கலப்பு திருமணம் செய்த காதல் கணவனை ஆணவக்கொலை செய்துவிட்டதாக கைக்குழந்தையுடன் மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அயநல்லூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகள் அமுல். இவர் கடந்த 8ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். ரயில் மூலம் சென்னைக்கு வேலைக்கு செல்லும் போது இவருக்கும் ஆரணி அடுத்த காரணி கிராமத்தில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த கௌதம் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு கௌதம் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இரண்டு வருடங்களாக சென்னையில் வசித்து வந்த காலத்தில் வார விடுமுறை நாளில் மட்டும் கௌதம் தமது தந்தை வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் பிரசவத்திற்காக தமது அக்கா ஊரான ஆவூரில் அமுலும், கௌதமும் குடி பெயர்ந்துள்ளனர். கடந்த மாதம் அமுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த சூழ்நிலையில் கடந்த 17ஆம் தேதி கௌதமின் உறவினர் இறந்து விட்டதாக வந்த தகவலின் பேரில் காரணியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்ற கௌதம் வீடு திரும்பவில்லை. அமுல் தமது கணவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போதும் பேச முடியாமல் போனது, இதனால் சந்தேகமடைந்த அமுலின் உறவினர்கள் கௌதமின் ஊருக்கு சென்ற போது கௌதம் இறந்துவிட்டதாக அங்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஒட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுல் ஒரு மாதமே நிரம்பிய தனது கைக்குழந்தையுடன் தமது கணவரின் மரணத்தை தம்மிடம் மறைத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் கணவரின் மரணத்தை மனைவிக்கு தகவல் கொடுக்காமல் அவரது சடலத்தை எரித்துள்ளதால் கவுதம் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது கணவரை ஆணவ கொலை செய்து தடையங்களை மறைப்பதற்காக தமக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக கவுதமின் சடலத்தை அவருடைய உறவினர்கள் எரித்து விட்டதாக அமுல் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளதால் கவுதம் ஆணவ கொலை புகார் குறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Death, Husband died, Murder, Police