தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது இரத்தின கம்பளம் போட்டு யாரும் எங்களை வரவேற்கவில்லை என்று கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அன்றிருந்த நிதிநிலை அறிக்கையின் படி 5.75 லட்சம் கோடி கடனில் தான் நாங்கள் வந்தோம் என்றும், நிதி பற்றாகுறை இருந்தபோதும் மக்களுக்கு தேவையான பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
திமுக சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி 87வது வட்ட கழகதிமுக சார்பில் ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்க பொதுகூட்டம் அம்பத்தூர் பாடி யாதவ தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திமுக பொருளாளர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்கினர்.
கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் தான் அனைத்து மேம்பாலமும் கட்டபட்டன. அதிலும் குறிப்பாக பாடி மேம்பாலம் விரிவாக்கம் செய்வதற்காக 100 கோடி தற்போது நிதியும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை 1964-ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்டது .
அதற்கு பிறகு வந்த டாக்டர் கலைஞரால் இன்னும் சிறப்பு மிக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முதல்வரிடம் கேட்டு கொண்டதன் பேரில் 24.9 கோடி ரூபாய் செலவில் 800 தொழிலாளர்கள் தங்ககூடிய அளவிற்கு தங்கும் விடுதி கட்டுவதற்கு அரசாணையும் பிறப்பிக்க பட்டுள்ளது என கூறினார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது இரத்தின கம்பளம் போட்டு யாரும் எங்களை வரவேற்கவில்லை. அன்றிருந்த நிதிநிலை அறிக்கையின் படி 5.75 லட்சம் கோடி கடனில் தான் நாங்கள் வந்தோம் ஒரு சிறந்த நிர்வாகத்தின் காரணமாக நம்முடைய மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேயராக இருந்த பொழுது சிறந்த நிர்வாகத்தை நடத்தினார்.
துணை முதலமைச்சராக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபொழுது சிறந்த நிர்வாகத்தை நடத்தி வந்தவர் என்பதை இந்த நாடு அறியும். இப்படிப்பட்ட முதலமைச்சர் கையில் இந்த நாடு வந்தபொழுது, அதையும் சரி செய்து, இந்த வருவாய் பற்றாக் குறையையும் சரி செய்து கிட்டத்தட்ட 4.6 சதவீதம் என்றிருந்த பற்றாக் குறையை, 3.8 சதவீதம் அளவிற்கு குறைத்து, வருவாயை அதிகப்படுத்தி இருக்கிறார். அதற்கான திட்டங்களையும் தீட்டியிருக்கிறார் என்பதை காட்டுகிறது.
Read More : கரூரில் பேருந்து கண்ணாடிகளை உடைத்த திருநங்கைகள், போலீசாருக்கும் அடி - பயணிகள் அவதி
அப்படிப்பட்ட முதலமைச்சருடைய திமுக ஆட்சியில் 25 மாவட்டங்களில் புதிய புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரபட்டன. அம்பத்தூர் தொகுதி என்பது 2011 -ல் புதிய பெயருடன் உருவாக்கப்பட்டது. 10 வருடமாக நீங்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை 2021-ல் முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி முதல்வராக வரவேண்டும் என்கிற காரணத்திற்காக எங்களுக்கு வாக்களித்து ஜோசப் சாமுவேல் அவர்களை எம்.எல்.ஏ. வாக அமர வைத்துள்ளீர்கள் அதற்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
இப்படிப்பட்ட இந்த தொகுதிக்கு 10 வருடமாக இழைக்கப்பட்ட அநீதியை யெல்லாம் போக்குகின்ற வண்ணமாக இந்த அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. என்னதான் தொழிற்பேட்டை அதிகம் இருந்தாலும் இந்த கழிவுநீர் எல்லாம் கொரட்டூர் ஏரியில் கலக்கிறது என்று எம்.எல்.ஏ. கூறியவுடன் 2முறை ஆய்வும் செய்ய வந்தார். கழிவுநீர் கலப்பதை தடுக்க 2.5 கோடி நிதியம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
நாங்கள் ஆசைப்படுகிறோம், எங்களை நம்பி ஓட்டுப் போட்ட உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற ஆசைப்படுகிறோம். எங்களுக்கு துறை அமைச்சர் பதவி ஆசையெல்லாம் கிடையாது. கடந்த 10 வருடமாக எப்படிப்பட்ட ஆட்சி (அதிமுக ஆட்சி) நடந்தது என்பதையும், இன்றைய ஆட்சி எப்படி நடக்கிறது என்பதையும் கண்கூடாக பார்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கேள்வி நேரத்தில் என்ன பேசுகிறோம் என்பதைக் கூட நாட்டு மக்களின் நலன்களுக்காக நேரலையில் காண்பித்துக் கொண்டு இருக்கிறோம்.
Must Read : ஆண் பிள்ளைகளை கண்டித்து வளருங்கள்.. நள்ளிரவு சம்பவத்தால் தேசிய மோட்டார் சைக்கிள் வீராங்கனை நிவேதா வேதனை
தமிழகத்தில் இலங்கை வாழ் மறுவாழ்வு முகாம் மக்களுக்காக 314 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு 123 கோடி ஒதுக்கீடு செய்து, தாயுள்ளம் கொண்ட முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இந்த திகழ்கிறார்.
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் ஏழை மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். நிதிநிலை பற்றாகுறை இருந்தபோதும் மக்களுக்கு தேவையான அனேக திட்டங்களை தமிழக முதல்வர் அவர்கள் கொண்டு வந்துள்ளார் என்று கூறினார்,
செய்தியாளர் - கன்னியப்பன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.