திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டி புதூரை சேர்ந்தவர் முரளி மகன் அஜய் (23). பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரை, அஜய் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவர, சிறுமியைத் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த சிறுமி, காதலன் அஜய்யுடன் நேற்று முன்தினம் இரவு மாயமானார். நீண்ட நேரம் சிறுமியை காணாததால் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் ஆத்துப்பாளையம் செல்லும் ரோட்டில் கிருஷ்ணவீணா நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான பயன்பாடற்ற கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரித்தனர். இறந்தது மாயமான அவிநாசி கைகாட்டி பகுதியை சேர்ந்த சிறுமி என்பது தெரியவந்தது.
மேலும் அந்த கிணற்றில் தேடியபோது அஜய்யின் உடலும் மீட்கப்பட்டது. 2 உடல்களையும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - நாமக்கல் ஆட்சியர் தகவல்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நேற்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் இருவரும் வருவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரு சக்கர வாகனத்தை கிணறு இருக்கும் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இறந்துபோன சிறுமி ஜெர்கின் அணிந்திருந்ததால் அவரின் உடல் முதலில் தண்ணீரில் மிதந்தது. பின்னர்தான் அஜய் உடலை தேட முடிந்தது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டோம். அஜய் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளார்கள்’ என்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.