திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியை சேர்ந்த பிரதாபன் சென்னையில் சமையலராக பணியாற்றி வந்தார். மனைவி ரேகா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்த ரேகா திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த பிரதாபன் மனைவியை காண சொந்த ஊருக்கு விரைந்தார். இந்நிலையில், கடன் கொடுத்த நபர் வட்டி கேட்டு அவதூறாக பேசியதால் மனமுடைந்த ரேகா தீக்குளித்தது தெரியவந்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தை கணவர் பிரதாபன் செல்போனில் பதிவு செய்தார்.
தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐயப்பன் என்பவரிடம் 10000 ரூபாய் கடன் வாங்கியதாகவும், வருமானம் இல்லாததால் வட்டியை கொடுக்க முடியவில்லை என்றும் ரேகா கூறியுள்ளார். ஐயப்பன் தம்மை அவதூறாக பேசியதாகவும், குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் குடும்ப பிரச்னையால் தீக்குளித்ததாக வாக்குமூலம் அளித்த ரேகா, தற்போது வேறு காரணத்தை கூறியுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.