திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் உள்ள பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், 2019 நவம்பர் மாதம் முதல், கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ், என்பவருக்கு எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்த ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி, அருகில் வண்டல் ஓடைகளிலிருந்து சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டது.
Also Read: போன் செய்த மாமா.. வீட்டில் சடலமாக கிடந்த அக்கா - ஓமலூர் பெண் கொலையில் நடந்தது என்ன?
இதுகுறித்த தகவல் தெரியவர சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் பிரதிக் தயாள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்டார் அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஐகோர்ட் உத்தரவின் படி, போலீசார், ஒப்பதாரரான பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அரசிற்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் வகையில் எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். கடத்தலில் ஈடுபட்ட சமீர் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டார்.
அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு உறவினருமான சபீதா துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள் எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே உயர் அதிகாரிகள் பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில் 2021 ஜூலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார், மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் (வயது 69) மற்றும் ஐந்து பாதிரியார்களை விசாரனணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி ஆய்வாளர் உலகு ராணி உள்ளிட்ட போலீசார் முடிவில் அவர்களை கைது செய்தனர்.
Also Read: 23-வது திருட்டில் கைதான பெண்.. நகைக்கடைக்கு வரும் பெண்கள்தான் டார்க்கெட்
திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிஷப் சாமுவேல் மார் இரணியஸ் (வயது 69) ஜோஸ் சமகலா (வயது 69) ஆகிய இருவரும் கொரோனா பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56) ஷாஜிதாமஸ் (58) ஜிஜோ ஜேம்ஸ் (37) ஜோஸ் கலவியால் (53) ஆகிய நால்வரையும் போலீசார் நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே பாதிரியார்களை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. பத்தனம்திட்டா கத்தோலிக்க டயோசிசன் நிர்வாகம் அவர்களை ஜாமீனில் எடுக்க நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மணல் கடத்தல் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு பூதாகாரமாக பேசப்பட்ட நிலையில் தற்போது இச்சம்பவத்தில் 6 பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . வருவாய்துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர்களின் உறவினர்களுக்கு இதில் நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் தொடர் விசாரனணயில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் : சிவமணி (நெல்லை) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.