ஸ்டேஷனில் வைத்து அடித்தார்கள்.. காவலர்கள் மீது வழக்கறிஞர் கொடுத்த பொய் புகார்- அதிரடி தீர்ப்பு வழங்கிய மனித உரிமை ஆணையம்
ஸ்டேஷனில் வைத்து அடித்தார்கள்.. காவலர்கள் மீது வழக்கறிஞர் கொடுத்த பொய் புகார்- அதிரடி தீர்ப்பு வழங்கிய மனித உரிமை ஆணையம்
நெல்லை
Thirunelveli | வாகனச் சோதனையில் அபராதம் விதித்த காவலர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் பொய் புகார் அளித்த வழக்கறிஞருக்கு 10,000 அபராதம் மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பு.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கர சேதுபதி கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது காரில் பணி நிமித்தமாக சாத்தூர் சென்றுகொண்டிருந்தபோது அய்யாபுரம் அருகே போலீசார் அவரது காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர் மீது அபராதம் விதித்து உள்ளனர். ஆனால் தன் மீது எந்த தவறும் இல்லை எனக் கூறி அதனை ஏற்க மறுத்து காவல்துறையினருக்கும் வழக்கறிஞருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலைய பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் காவல் நிலையத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறி இதன் காரணமாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில மனித உரிமை ஆணையத்தில் குருவிகுளம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் இருவர் என நான்கு பேர் மீது புகார் செய்திருந்தார்.
இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்றைய தினம் வழக்கில் தீர்ப்பு அளித்தார். அதில் காவல்துறையினர் வாகன சோதனையில் இருந்தபோது அந்த வழியாக வந்த வழக்கறிஞர் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாதது மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் இன்சூரன்ஸ் இல்லாததும் கண்டறிந்து அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்ததாக தெரிய வந்தது.
காவல்துறையினர் மீது உள்நோக்கத்துடன் மனித உரிமை ஆணையத்தில் வழக்கு பதிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கறிஞர் பாஸ்கர சேதுபதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு அவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.