நெல்லை அருகே பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த பாளையஞ் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் வைகுண்டம் (வயது 41). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது திருநெல்வேலி மாநகர் பாளையங்கோட்டை காவல் நிலையம் திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலையம் ஆகியவற்றில் ஐந்து கொலை வழக்குகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கொலை முயற்சி அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது .
தன் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் வைகுண்டம் தனது சொந்த கிராமத்தில் இல்லாமல் திருநெல்வேலி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சொந்த கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள பாளையம் கால்வாயில் குளிக்க நேற்று காலை சென்ற வைகுண்டத்தை 5 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ஜெயராஜ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொலை குறித்து விசாரித்தபோது கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோசப் குடும்பத்திற்கும் முன்பகை இருந்ததாக தெரிகிறது. ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் இரு பிரிவுகளாக அடிக்கடி மோதிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது. பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வைகுண்டத்திற்கு தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அந்தக் குடும்பத்தில் ஆண்களே இல்லாத நிலையில் பெண் வாரிசு ஒருவரின் மகன் பழிக்குப்பழியாக இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழிக்கு பழியாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ஐயப்பன் (திருநெல்வேலி)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.