முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கையில் சாதி கயிறு கட்டுவதில் மோதல் - 12ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு

கையில் சாதி கயிறு கட்டுவதில் மோதல் - 12ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு

செல்வசூர்யா

செல்வசூர்யா

கையில் சாதி கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் மாணவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளி மாணவர்களிடையே கையில் சாதி கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் 12 வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார். 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உச்சிமாகாளி. இவர்களுக்கு செல்வசூர்யா என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர். செல்வசூர்யா இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பில்  கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில்  படித்து வந்தார். அதே பள்ளியில் பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி செல்வசூர்யாவுக்கும் அதே பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் அடைச்சாணியை சேர்ந்த வேறு சமுகத்தை சேர்ந்த  மாணவருக்கும் இடையே கையில் ஜாதி ரீதியான கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் பொதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் 11ம் வகுப்பு மாணவர்கள் கல்லால் செல்வசூர்யாவை காதோரமாக  தாக்கியதாக தெரிகிறது. அவருக்கு காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே சமரசம் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து சென்று விசாரணை நடத்தி இருதரப்பினரையும் சமரசம் செய்துள்ளனர்.

இதன் பின்னர் வீட்டிற்கு வந்த செல்வசூர்யாவிற்கு இரவில் தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அவரை பெற்றோர் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மாணவரை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை செல்வசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாப்பாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் டி.எஸ்.பிக்கள் அம்பை பிரான்சிஸ், ஆலங்குளம் பொன்னரசு ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தபோது பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கக் குறைபாடு உள்ளதாகவும், இதனை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தால் மோதல் ஏற்பட்டு மரண சம்பவம் நடந்திருக்காது என்று தெரிவிக்கின்றனர்.

Also read... ரசாயன உப்பை சமையல் உப்பு என நினைத்து தின்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

மேலும் காயம் ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் மாணவர் உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.  இச்சம்பவம் தொடர்பாக மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த மாணவரும் தாக்கிய மாணவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவரின் உடலை பெறுவதில் சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.

இதன் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் மற்றும் பள்ளக்கால் புதுக்குடி பகுதிகளில் காவல்துறை  கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாணவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் மீது கொலை (302) உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்புடைய மாணவர்கள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Caste, Crime News, School students, Thirunelveli