தமிழகத்தில் சில பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதை கண்காணிக்க வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு புகார்கள் எழுந்த போது, அப்போதைய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளையோ, வளையங்களையோ, மாணவர்கள் அணிந்துவரக் கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக, சாதிய அடையாளத்தோடு நெற்றியில் திலகமிட்டு வருவதை அனுமதிக்கக்கூடாது என்பதே அதன் முக்கிய அம்சம். 2018 ஆண்டு BATCH பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகப் பள்ளிகளில் ஆய்வு செய்தபின் தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே பள்ளிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த எச்.ராஜா, இந்து மதநம்பிக்கை தொடர்பானவற்றை தடை செய்யக்கூடாது என்றார்.
இந்த நிலையில், அப்போதைய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதுபோன்ற வழக்கமே எங்கும் இல்லை என தெரிவித்திருந்தார். மேலும் பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் சுற்றறிக்கை தனது கவனத்திற்கு வராமலேயே அனுப்பப்பட்டதாகவும், பழைய நிலையே தொடரும் என்றும் கூறி அந்த அறிவிக்கையை ரத்து செய்தார். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு சாதிக் கயிறு கட்டி வர தடையேதும் இல்லை என்பது போல மாணவர்கள் எப்போதும் போல் கலர்கலரான கயிறுகளுடன்வலம் வரத்தொடங்கினர்.
Also Read :
பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்
இந்தநிலையில் சாதிக் கயிறு பிரச்னையால் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் டூ மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மாணவருக்கும், 11-ம் வகுப்பில் படிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவருக்கும் இடையே கையில் சாதிக் கயிறு கட்டுவது தொடர்பான வாக்குவாதமே தகராறுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கல்லால் தாக்கப்பட்டு மாணவர் காயம் அடைந்தார். வீட்டிற்கு வந்த அவருக்கு இரவில் தலையில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார். இருதரப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சாதிக்கயிறு பிரச்னை உயிரிழப்பில் முடிந்திருப்பதும் தாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் இந்த பிரச்னையை விஸ்வரூபம் எடுக்கச்செய்துள்ளது
. தென் தமிழகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் கையில் வண்ணக் கயிறுகள் அணிந்து வருவதும் நாம் அறிந்திராத அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றுமில்லை. ஆனால்,இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாதிக்கத் தயாராகும் வயதில் தடைக்கற்களாக முன்னெழுந்து நிற்கும் சாதிக்கயிறு அகலவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.