திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கூடத்தில் பெண்ணின் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் இங்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் மேல்தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை கூடத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் அங்குச் சென்று பார்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த பெண், மண்ணச்சநல்லூர் ஏரி மிஷின் தெருவை சேர்ந்த மருதை மகள் சிவபாக்கியம் (வயது 55) என்பதும், மனநலம் சற்று பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், கடந்த, 12ம் தேதி 'மண்ணச்சநல்லூர் கடைவீதியில் டீ சாப்பிட்டு விட்டு வருவதாக' வீட்டிலிருந்து கிளம்பிய சிவபாக்கியம், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையும் படியுங்கள் : மது வாங்கித் தராததால் ஆத்திரம்... கல்லூரி மாணவனை கடத்தி சரமாரியாக தாக்கிய கும்பல்
அதன்பிறகு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்த சிவபாக்கியம், யாருக்கும் தெரியாமல் அறுவை சிகிச்சை கூடத்திற்குள் புகுந்திருக்கிறார். இதனால் அங்கேயே மயங்கிய நிலையில் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வழக்கமாக வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இங்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதால் யாரும் கவனிக்கவில்லை.
அவரது மரணத்திற்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றோம். அவரது மரணத்திற்கான உண்மையான காரணம், பிரேத பரிசோதனை முடிவில் உறுதியாக தெரிய வரும்" என்கின்றனர்.
செய்தியாளர் : விஜயகோபால்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.