திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து, 4 மாதங்களாக, தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதையும் படிங்க: சென்னையில் அரிவாள், கத்திகளுடன் சுற்றி வந்த ரவுடிகளை தனி ஒருவனாக துரத்தி பிடித்த காவல் உதவி ஆய்வாளர்!
அதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையிலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதைத்தொடர்ந்து, கடந்த, 2017ம் ஆண்டு, ராமஜெயத்தின் மனைவி லதா தொடர்ந்த வழக்கின் காரணமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
தொடர்ந்து, 4 ஆண்டுகள் சிபிஐ விசாரித்தும் வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், 'இந்த வழக்கை, தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க: வங்கிகளில் அடகு வைத்த நகைகளில் கைவரிசை காட்டிய நகை மதிப்பீட்டாளர்!! வாடிக்கையாளர்கள் குமுறல்!
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், வழக்கு தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது, ஏற்கனவே பல்வேறு குழுவினர் விசாரித்து வைத்துள்ள ஆவணங்களின் மீதான மேல் விசாரணையை துவக்கியது. அடுத்த அதிரடியாக, திருச்சியில் இன்று முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர், வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் தலைமையிலான, 5 தனிப்படையினர், திருச்சியில் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர்.
சம்பவத்தன்று ராமஜெயம் தில்லைநகர் வீட்டிலிருந்து நடைப் பயிற்சி சென்ற பாதை, அவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோட்டை ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதி மற்றும்,
அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நாளையும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஆய்வு திருச்சியில் தொடரும் என்று கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ராமஜெயத்தின் கொலை வழக்கு சூடு பிடிக்க துவங்கியிருப்பது, திருச்சி திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.