தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 2018ஆம் ஆண்டு பெரும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தின் 100ஆவது நாளில் ஏராளமான மக்கள் பங்கேற்று பெருந்திரளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டு காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அன்றைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. ஆணையம் 36 கட்டங்களாக விசாரணை நடத்தி, அதன் முழு அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் சில நாள்களுக்கு முன்னர் சமர்பித்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடி பாத்திமா நகரில் பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை சேசுதாஸ் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்பகுதி மக்கள் பங்கேற்று மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், "ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் மக்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணையை ஏற்க முடியாது. நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . தமிழக முதல்வர் ஸ்டாலின் கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.