தென்காசியில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 30) கார் டிரைவராக பணியாற்றி வந்தார், இவர் மாலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். மாலா விளாத்திக்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தென்காசி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் அரவிந்த சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக தென்காசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்னரசு (வயது 20) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் சங்கரன் கோவில் கோர்டில் சரண்டைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.
அரவிந்த மாமியார் அதாவது மாலாவின் தாய் பொன்ராணி தனது மருமகனை கூலிப்படையை ஏவி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் பொன்ராணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொன்ராணியிடம் நடத்திய விசாரணையின்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.பொன்ராணியின் மகள் விளாத்திகுளத்தில் பியூட்டி பார்லர் நடத்திய வருகிறார். இது அரவிந்த்-க்கு சுத்தமாக பிடிக்கவில்லை இதனால் இனி நீ பியூட்டி பார்லர் நடத்தக்கூடாது எனக் கூறி மனைவியிடம் சண்டைப்போட்டுள்ளார். கார் ஓட்டுநரான அரவிந்த் சரியாக வேலைக்கு செல்லாமல் காலத்தை கடத்தி வந்தியுள்ளார்.
வேலைக்கு செல்லாத கணவனுடன் என்ன வாழ்க்கை வாழப்போகிறாய் பேசாமல் விவாகரத்து செய்துவிடு எனக் பொன்ராணி தன் மகளிடம் கூறியுள்ளார். காதல் கணவனை விட்டு பிரிய மனமில்லாத மாலா தாயின் அறிவுரையை ஏற்கவில்லை. மேலும் நான் என்னுடைய கணவனுடன் தான் இருப்பேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக மாமியார் பொன்ராணிக்கும், மருமகன் அரவிந்திற்கும் இடையே தகராறு வலுத்துள்ளது. இதனால் பொன்ராணி மருமகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
பொன்ராணி கீழப்புலியூரில் தனக்கு தெரிந்த சீதாராமன் மற்றும் அவரது நண்பர்களிடம் தனது திட்டத்தை கூறியுள்ளார். மேலும், மருமகனை கொலை செய்ய ரூ.8 லட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.4 லட்சம் பல தவணைகளில் வழங்கியதாக கூறப்படுகிறது. கூலிப்படையை சேர்ந்தவர்கள் கடந்த மாதமே அரவிந்தை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், அரவிந்த் எப்படியோ தப்பிவிட்டார். அதன்பிறகு கடந்த 3-ந் தேதி அரவிந்தை தென்காசிக்கு வரவழைத்த கொலைக்கும்பல். அரவிந்தை கொலை செய்து உடலை கல்குவாரி தண்ணீரில் வீசிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.