திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவர்களிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தி்ன் போது ஏற்பட்ட மோதலில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே உள்ள ஜமீன் கொரட்டூர் கிராமத்தில், தனியார் கடலியல் கல்லூரி உள்ளது. அங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சில மாணவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் கேக் வெட்டும் போது 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் மாணவர்கள் இருந்ததால் அவர்களில் சிலர், ஒரு மர நாற்காலியின் காலை உடைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்ய சர்மா என்ற மாணவரின் கழுத்தில் குத்தியுள்ளனர்.
கழுத்தில் குத்திய வேகத்தில் அதிகளவில் ரத்தம் வெளியேறி மாணவர் ஆதித்ய சர்மா அங்கேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர் சர்மா உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த வழக்கில் 18 வடமாநில மாணவர்களைப் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் மதுபோதையில் மட்டுமின்றி கஞ்சா போதையிலும் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜமீன் கொரட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்