தேனியில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர். இரு தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்து நிகழ்வதால், விபத்து தடுப்பு பாதுகாப்பு திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தின் 17வது ஆட்சியராக கே.வி.முரளிதரன் நேற்று முன்தினம் (ஜூன்-16) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழக கேரள எல்லையான போடி அருகே முந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த் தடுப்பு சிறப்பு முகாமை நேற்று மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தேனி ஆட்சியர்
அதனைத் தொடர்ந்து தேனிக்கு திரும்பி வரும் போது ஆர்.எம்.டி.சி. காலணி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார்கள். இதில் போடியை சேர்ந்த தர்மர், ஓடைப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகியோர் காயமடைந்தனர். நிகழ்விடத்தில் இருந்த ஆட்சியர் வாகனத்தை நிறுத்தி தனது உதவியாளர்களுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விபத்து நடந்த பகுதியானது கொச்சின் - ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல் - குமுளி ஆகிய இரு தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமாகும். அங்கு உயர்மட்ட மேம்பாலமோ, வேகத்தடுப்புகள் குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லாததை அறிந்த ஆட்சியர், அங்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் படி தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் தேனி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி செய்தியாளர்: பழனிக்குமார்