தேனியில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் இணைந்து, நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்களின் இல்லங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நக்சல் அமைப்பினர் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் வேல்முருகன், ஈஸ்வரன் முத்துச்செல்வம், பழனிவேல் ஆகிய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வேல்முருகன் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின் தலைமறைவாகினார்.
இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கேரள தண்டர்போல்ட் காவல்துறையினருக்கும், நக்சல் அமைப்பினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேல்முருகன் பலியானார். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் உள்ள வேல்முருகன் என்பவர் இல்லத்தில் இன்று காலை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தேசிய புலனாய்வுத்துறை ஆய்வாளர் சசிரேகா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், வேல்முருகன் என்பவர் ஈழத்திலும் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சுமார் 2மணி நேர சோதனைக்குப் பிறகு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
இதே போன்று முருகமலை வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி வெளியே வந்த பண்ணைப்புரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது இல்லத்திலும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Must Read : மதுராந்தகம் வாக்கு எண்ணும் மையத்தில் தூங்கும் அலுவலர்கள் : வேட்பாளர்கள் அதிர்ச்சி
இந்த சோதனையின்போது பெரியகுளம் வருவாய் துறை அதிகாரிகள், நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் உடனிருந்தனர்.
செய்தியாளர் - பழனிகுமார், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.