தேனியில் விபத்தில் விவசாயி இறந்ததாக சொல்லப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்கு பின்பு திடீர் திருப்பம் மகனே தந்தையை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்.
தேனி - அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மைய கவுன்டன்பட்டியில் உள்ள பள்ளி ஓடை தெருவைச் சேர்ந்தவர் ஆசையன்(43). விவசாயம் செய்து வந்த இவர், கடந்த மார்ச் 15ஆம் தேதியன்று காலை தேனி அன்னஞ்சி விலக்கிற்கு மேற்கே உள்ள தனது தோட்டத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, என்.ஜி.ஓ. காலணி அடுத்துள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடப்பதாக மனைவி செல்விக்கு (35) தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் செல்வி அளித்த புகாரின் பேரில் வாகன விபத்தாக வழக்குப் பதிவு செய்த அல்லிநகரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
Also Read: இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது... ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்
காவல்துறையினரின் புலன் விசாரணையில், விபத்து, கொலை எனத் தெரியவந்தது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இனங்க சென்ற பிக்கப் வாகனம் ஒன்று ஆசையன் மீது மோதியது தெரியவந்தது. அதில் ஓட்டுநர் அருகில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது. பின் அந்த வாகனப் பதிவெண் கொண்டு அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சிவனேஷ்வரன் (27) என்பவர் ஓட்டியது தெரிந்தது. மேலும் அந்த வாகனத்தில் உடன் வந்தது இறந்த ஆசையனின் 16வயது மகன் தான் வழக்கின் திருப்பமாகும்.
இதையடுத்து ஆசையனின் குடும்பத்தினரிடம் கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் ஆசையன் - செல்வி தம்பதியினருக்கு ஹரீஷ் (18), அபினேஷ் (16) என்ற இரு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ஹரீஷ் பி,காம் முதலாம் ஆண்டும், இளைய மகன் அபினேஷ் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். மனைவி செல்வி தனியாக கார்மென்ட்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.
Also Read: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை - ஓசூரில் பயங்கரம்
இந்த நிலையில் ஆசையனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.அதன் காரணமாக வீட்டில் மனைவி மற்றும் மகன்களுடன் ஆசையன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தை மீதும் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன் - மனைவி இருவரும் சட்டப்பூர்வமாக பிரிவதற்கு கோர்ட்டில் விவாகரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர். இருந்த போதிலும் தம்பதியினர் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கடந்த மார்ச் 20 ஆம் தேதியன்று வசந்த விழா வைப்பதற்காக செல்வி பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை அறிந்த ஆசையன், விசேஷம் வைத்து அதில் வரும் மொய் பணத்தில் தனக்கு ரூபாய் 10லட்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு மனைவி செல்வி மற்றும் மகன்கள் மறுத்துள்ளனர். தொடர்ந்து தனது தாயிடம் தகாராறில் ஈடுபட்டு வந்த தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அவரது இளைய மகனான 16வயது சிறுவன் அபினேஷ்.
இதற்காக அவரது சித்தப்பா உறவுமுறையான பொம்மைய கவுண்டன் பட்டியில் உள்ள வெள்ளைச்சாமி தெருவில் வசிக்கும் சிவேனேஷ்வரன் (27) உதவியை நாடியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த ஆசையனை பின் தொடர்ந்த இருவரும், டாடா ஏஸ் பிக்கப் வாகனத்தை கொண்டு மோதி விபத்து ஏற்படுத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. வாகனத்தை சிவனேஷ்வரன் ஓட்டி வந்துள்ளார்.
இதையடுத்து 10நாட்களுக்குப் பிறகு இன்று விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தகாத உறவு முறையால் தந்தையை உறவினர் உதவியுடன் பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: பழனிக்குமார் (தேனி) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.