தேனி அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த பெயிண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமிநகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்குமார்(40). பெயிண்டர் வேலை செய்து வரும் இவருக்கு விருதுநகர் மாவட்டம் ஆவாரங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகள் பிரபாவுடன் (34) திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது. இத்தம்பதியருக்கு 17 மற்றும் 14வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சின்னமனூர் பகுதியில் தையல் வேலைக்கு சென்று வந்த பிரபாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜேஷ்குமார் அடிக்கடி அவருடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரபா உயிரிழந்து விட்டதாகக் கூறி அவரது கணவர் ராஜேஷ்குமார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தனது மகள் இறந்த தகவலை கேட்டு வந்த ஜெயராம், பிரபாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரபாவின் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து ராஜேஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில், மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட போது ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றம் செய்த சின்னமனூர் காவல்துறையினர் ராஜேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : பழனிகுமார்
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.