மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பழங்காநத்தம் பகுதியில் திறந்தவெளி மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு தலைமை தாங்கிப் பேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தென் மாவட்ட மக்களுக்கு நன்மை அளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு தடுத்து விட்டதாக குற்றம்சாட்டினார். ராமரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மாநாட்டில் திமுக பொருளாளருமான எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பேசும் போது, சேது சமுத்திர திட்டம் நிறைவேறியிருந்தால், சுமார் 70 சதவிகித கப்பல்கள், அந்த கால்வாய் வழியாக சென்றிருக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் சேது சமுத்திர திட்டத்தை தடுத்தவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள் என்றும் காட்டமாக கூறினார்.
மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை கூறி, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்ட சிறந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் எனக் குறிப்பிட்டார். மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் யாராலும் நம்மை காப்பாற்ற முடியாது எனவும் அவர் பேசினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: K.Veeramani, Sethusamudram Project, T.r.balu, Thirumavalavan