வேலூர் மாவட்டம், ஊசூர் அருகேயுள்ள கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த ராணுவ வீரரின் மகள் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம் பெற்ற காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 23 ஆம் தேதி திருமணம் நடந்தது.
முதலிரவில் கற்புடன்தான் இருக்கிறாயா? இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதற்கு முன்னர் யாரையும் காதலிக்கவில்லையா? யாருடனும் உறவு வைத்துக்கொண்டதில்லையா எனக்கேட்டு சந்திரலேகாவை நரக வேதனையில் தள்ளியுள்ளார் கணவர் பாலாஜி.
சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் சந்திரலேகா வீட்டிற்கு சென்று அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை கூறி சந்திரலேகாவின் நற்குணங்கள் குறித்து சநதிரலேகாவின் கணவர் பாலாஜியிடம் எடுத்து கூறியுள்ளார்.
சந்திரலேகாவைப்பற்றி உயர்வாக பேசிவிட்டு சென்றபிறகு கணவன்-மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . சந்திரலேகா மீது பாலாஜிக்கு சந்தேகம் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.
இதனால் மனம் வெறுத்துப்போன சந்திரலேகா ஞாயிற்றுக்கிழமை கோவிந்த ரெட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று தன் மனதில் உள்ளதையெல்லாம் கடிதமாக எழுதி வைத்துவிட்டு உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தன்னை தீக்கு இரையாக்கி கொண்டார்.
Also read... மூன்று சகோதரிகளுக்கும் ஒரே ஸ்மார்ட்போன்: ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதில் சிரமம்: மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி
பலத்த தீக்காயமடைந்த சந்திரலேகாவை மீட்டு அவரது பெற்றோரும் உற்றாரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியுர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், சந்திரலேகாவின் கணவர் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
திருமணமான எட்டே நாளில் பெண் தீக்குளித்து உயிரிழந்ததால் வேலூர் வருவாய் கோட்டாச்சியர் கனேஷ் விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.