ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Also read... தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் - சபாநாயகர் தனபால்
அப்போது, அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பேரறிவாளனின் தாய், தந்தை இருவரும் வயதானோர் என்பதாலும், அவர்களை கவனித்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
தமிழக அரசு 7 பேரையும் விடுவிக்க பரிந்துரைத்த நிலையில், ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையை காரணம் காட்டி அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
சிறை விதிகளில் விலக்களித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான் என வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும், பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க ஆலோசனைகள் வழங்க சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்க கூடாது எனவும் நீதிபதிகள், அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அரசிடம் விளக்கம் கேட்க வேண்டியுள்ளதாகவும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரிடம் தெரிவிப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பேரறிவாளன் பரோல் வழக்கை பொறுத்தவரை, அவரது உடல்நிலை முழுமையாக, புழல் மருத்துவமனையிலேயே தினசரி கவனிக்கபடுவதாகவும், அவரது உடல் நிலையில் எவ்வித குறைபாடும் இல்லாமல், சீரான நிலையில் இருப்பதாக பதில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து சிறைவாசிகளுக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழுமையாக பின்பற்றப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும், சிறையில் இருக்கும் வரை சிறை விதிகளை கடைபிடிக்க வேண்டுமெனவும், கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என அரசு வழக்கறிஞர் பிரதாப்குமார் வாதிட்டார்.
கடந்த முறை பேரறிவாளனுக்கு வழங்கிய பரோல், கடந்த ஜனவரி மாதம் தான் முடிந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் மறுபடியும் பரோல் கேட்க முடியும் என தெரிவித்தார்.
அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Perarivalan, Tamil Nadu govt