முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
தமிழக முதலமைச்சராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி இரவு காலமானார். இதன் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் அதிமுகவினர் மவுன ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்காக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் இன்று காலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் நோக்கி மவுன ஊர்வலம் நடத்த உள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அதிமுகவினர், பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொள்கின்றனர். இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். அதிமுக-வினர் ஊர்வலத்தைத் தொடர்ந்து, டிடிவி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் அண்ணா சிலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலம் நடத்த உள்ளனர். இதேபோல, தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரிக்க உள்ளனர்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa