உள்ளாட்சித்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் வாக்காளர்கள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தினர் வாக்குகளை விற்க மாட்டோம் என முடிவெடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒருபுறம் பிரசாரம், மறுபுறம் பிரியாணியும், மது விருந்து உபசரிப்பும் அரங்கேறின. மதுபோதையில் அதிமுக கொடியை ஏந்தியபடி, ஆளே இல்லாத சாலையில் ஒருவர் அமர்ந்தபடி ஒருவர் சுழன்று சுழன்று நடனமாடினார்.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 21 வயதான நாகர்ஜூன், தமிழகத்திலேயே இளம் வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் மீம்ஸ்கள் உதவியுடன் சமூகவலைதளங்களில் வாக்கு சேகரித்து வருகிறார். மதுரை மாவட்டம் மன்னாடிமங்கலத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம், உளறியதால் அங்கு கூடியிருந்தோர் குழப்பமடைந்தனர்.
ஆரணி அடுத்த லாடவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கற்பகம் என்பவர், வயலில் வேலை செய்தவர்களிடம் வாக்கு சேகரித்ததோடு, தலையில் துண்டை கட்டிக்கொண்டு நடவு நட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராம மக்கள், தங்கள் வாக்கை விற்கக்கூடாது என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை கிராமத்து இளைஞர்கள் வீடுதோறும் ஒட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார். அப்போது டிரம்ஸ் தாளத்திற்கு ஏற்ப பெண்கள் குத்தாட்டம் போட்டனர். நாமக்கல் மாவட்டம் 12வது வார்ட்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வள்ளியம்மை, வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
தருமபுரியில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பழனியப்பன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கடலூரில் வாக்காளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் அதிகாரியை தாக்கினர். இது தொடர்பாக 36 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் அனுப்பம்பட்டு, மீஞ்சூர் ஊராட்சியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பாட்டியும். பேரனும் உற்சாகமாக நடனமாடினர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு 27ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 30ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு 28ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.