கோவை கருப்பராயன்பாளையத்தை சேர்ந்த 105 வயதான மாரப்பன் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் இவர் வாக்களித்து இருக்கின்றார் என்பது இவரது சிறப்பம்சம்.
1952 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் தவறாது வாக்களித்த பெருமைக்குரியவர் மாரப்பன். கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்பன் 1916 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 1 ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவரது வயது 105. இவரது பிறந்த தேதியை அவரது பெற்றோர்கள் ஓலையில் தமிழில் எழுதி வைத்துள்ளனர்.
விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாக இவர், மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து நடந்து சென்று , கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாரப்பன் தனது ஜனநாயகக்கடமையை ஆற்றினார். 105 வயதானவர் வாக்களித்து செல்கிறார் என தேர்தல் நடத்தும் அலுவலர் சொன்னதும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். 105 வயதில் ஓட்டுப்போட்டு திரும்பியவரை, கருப்பராயன்பாளையத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பெருமையோடு பார்த்தனர்.