தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக இயந்திரம் மூலம் உளுந்து விதைத்துள்ளனர். இதற்கான இயந்திரம் தனியாரிடம் வாடகை அதிகளவில் இருப்பதால் தமிழக அரசு மானியத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி அடுத்தப்படியாக கரும்பு, வாழை, உளுந்து, எள் பயிரிடப்பட்டு வருகிறது. எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு 66 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் முதல் முறையாக திருவையாறு அருகே விளாங்குடியை சேர்ந்த விவசாயி இயந்திரம் மூலம் உளுந்து விதைப்பை செய்துள்ளார்.
இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கைகளால் உளுந்து தெளிக்கையில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ முதல் 10 கிலோ வரை விதை தேவைப்படும். மேலும் விதை கைகளால் தெளிக்கும் போது பள்ளம், மேட்டில் விதைகள் விழுவதனால் சீரற்ற முறையில் பயிர் வளரும், மேலும் அதிகளவில் களை உருவாகும்.
அவற்றிற்கு தண்ணீர், உரங்கள் இடுவதற்கும் சிரமமாக இருக்கும். ஏனென்றால் சமஅளவாக பயிருக்கு தண்ணீரும் உரமும் கிடைக்காது. இதனால் மகசூல் பாதிக்கும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும். தற்போது இயந்திரத்தின் மூலம் விதை விதைப்பதனால் ஏக்கருக்கு 4 கிலோ முதல் 5 கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. 50 சதவீதம் ஆட்கள் கூலி, உரமிடுவது போன்றவற்றின் செலவும் குறைகிறது.
ALSO READ | 3 பல்பு கொண்ட ஓட்டு வீட்டுக்கு ரூ.25,000 மின்கட்டணம்.. மின் கணக்கீட்டாளர் மீது அதிரடி நடவடிக்கை..!
மேலும் விதைக்குள் இடைவெளி விட்டும் ஒரே சீராக விதைப்பதால், முளைப்பு தன்மையும், தண்ணீரும், உரமும் சமமாக அனைத்தும் விதைகளுக்கும் கிடைப்பதால் மகசூல் அதிகமாக கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் செலவினங்கள் 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைந்து உள்ளதால் விவசாயிகள் கூடுதல் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த ஒரு இயந்திரம் விதை விதைப்பது, உரம் இடுவது, பாத்தி கட்டுதல் என மூன்று பணிகளை செய்கிறது.தற்போது தனியாரிடம் இயந்திரத்திற்கான வாடகை ஏக்கருக்கு 2,500 ரூபாயாக உள்ளது. எனவே தமிழக அரசு இந்த இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : எஸ்.குருநாதன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.