நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி மற்றும் கும்பகோணம் மாநகராட்சி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் நகராட்சி 20 பேரூராட்சிகளில் போட்டியிடக்கூடிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் முக.
ஸ்டாலின் காணொளி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக தஞ்சை மாநகராட்சியில் 51 மாநகராட்சி வார்டுகள் உள்ளிட்ட ஐம்பத்தி ஏழு இடங்களிலும் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் நான்கு பேரூராட்சிகளில் 5 இடங்களிலும். கும்பகோணம் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பேரூராட்சிகளில் 13 இடங்களிலும் என மொத்தம் 75 இடங்களில் எல்இடி ஸ்கிரீன் அமைக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பரப்புரையை காண்பதற்காக பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. தஞ்சையில் நடைபெறக்கூடிய பிரச்சாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘தஞ்சையிலே மாமன்னன் ராஜராஜனின் சிலை வைத்தவர் கருணாநிதி. ராஜராஜன் ஆயிரமாவது விழா கொண்டாடியது கருணாநிதி. மகாமக திருவிழாவை சிறப்பாக நடத்தியது திமுக ஆட்சிதான். மேட்டூரில் இருந்து ஜீன் 12 தண்ணீர் திறந்து விட்டு முறையாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதை உறுதி செய்தது திமுக அரசு.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு ஒரு கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மேம்படுத்தப்படும். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 53.50 கோடி ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
காவிரி பிரச்சினைக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தி அதன் இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பெற்றுக் கொடுத்தது திமுக அரசுதான். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை காத்த இயக்கம்தான் திராவிட இயக்கம். எடப்பாடி பழனிச்சாமியை, பா.ஜ.க பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும். பா.ஜ.க வாய்ஸில் மிமிக்ரி செய்து கொண்டுள்ளார். வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது திமுக அரசு. அது உழவர்களுக்கான சட்டம் எனக் கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி.
போராடுபவர்கள் தரகர்கள் எனக் கூறியவர். மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதன் மூலம் விவசாயிகள் தலையில் துண்டு போட நினைத்தவருக்கு, துண்டு தன் தலையில் விழுந்தது. வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தந்ததால், விவசாயிகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா விதிமுறை காரணமாக நான் காணொளி வாயிலாக பிரச்சாரம் செய்து வருவதை பழனிச்சாமி ஏளனம் செய்கிறார்.
கேஸ் விலை குறைப்பு என்னாச்சு? பிரச்சார கூட்த்தில் பெண் எழுப்பிய கேள்விக்கு உதயநிதியின் பதில்
நான் நேரடியாக பிரச்சாரம் செய்தால் இந்த கூட்டத்தை பார்த்து என்ன சொல்வார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சை மாவட்டத்திற்கு நானே நேரடியாக வந்து வெற்றி விழாவில் பங்கேற்பேன்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.