தஞ்சாவூர் அருகே பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் ராஜலட்சுமி தம்பதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் குழந்தை பிறந்தது, காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் யாருமின்றி மருத்துவமனையில் உதவிக்கு யாரும் இன்றி தனியாக இருப்பதை பார்த்த பெண்மணி ஒருவர் ராஜலட்சுமிக்கு உதவி செய்வது போல் மூன்று நாட்கள் கூடவே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை ராஜலட்சுமியை கழிவறைக்கு அனுப்பிவிட்டு குணசேகரனையும் கடைக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் கட்டைப்பையில் பெண் குழந்தையை கடத்தி சென்றார். இச்சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணி நடைபெற்றது. மருத்துவமனை மற்றும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் பெண்மணியை காவல்துறையினர் தேடி வந்தனர். மேலும் அவர் சாலையில் ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் குழந்தையை கடத்தியதாக பட்டுக்கோட்டை காலனியை சேர்ந்த விஜி என்பவரை என்று காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், பட்டுக்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜி இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். அவரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த 10 மாதமாக அவரை நம்ப வைத்துள்ளார். மேலும் வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு தஞ்சை மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை கடத்துவதற்கான திட்டத்தை போட்டுள்ளார். அப்போதுதான் குணசேகரன் ராஜலட்சுமி உறவினர்கள் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதை கண்டு அவர் குழந்தையை கடத்திச் சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குழந்தையை கடத்துவதற்கு முன்பு, குழந்தைக்காக டயபர் ஒன்றை அந்த மர்மப் பெண் வாங்கியுள்ளார். அப்போது டயபர் வாங்கும்போது, அதற்கான பரிசுத் தொகை பெறுவதற்கான கூப்பனில் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு உள்ளார். அந்த தொலைபேசி எண்ணை வைத்து தான் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட குழந்தை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவ்ளிப்ரியா பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். குழந்தை பெற்ற தாய் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரவியதால், மருத்துவமனை முழுவதும் பொதுமக்கள் குழந்தை காண்பதற்கு திரண்டனர். மேலும் தங்களுடைய மகிழ்ச்சியை கைதட்டி ஆரவாரம் மூலம் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baby kidnaped, Crime News, Thanjavur