தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சியில் மலையில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையடிவாரத்திலுள்ள கிராமத்திற்குள் புகுந்து கால்நடை மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியில் உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பை சேர்ந்தவர் பட்டு இவர் ஆடு மேய்த்து விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வீடு திரும்பினார். அப்போது அதில் ஒரு பெண் ஆடு காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று மாலை முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மலை அடிவாரப் பகுதிகளில் அவர் தேடிப்பார்த்த போது ஒரு மரத்தில் ஆடு தொங்கி கிடப்பதை பார்த்து அருகில் சென்றார். அப்போது காணாமல் போன தனது பெண் ஆடு என்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Also Read : தஞ்சை தேர் விழாவில் இறந்தவர்களின் இறுதி சடங்கில் ஒலித்த தேவாரம் பாடல்கள்.. அப்பர் அடியார்கள் விளக்கம்
இது குறித்து அவர் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்க்கு கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை உத்தரவின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை ஆட்டை அடித்து கொன்று மரத்தில் வைத்து தின்று ஆள் நடமாட்டத்தை கணித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றுள்ளது தெரியவந்தது.
இதை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
செய்தியாளர் : செந்தில், தென்காசி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.