கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அருள்மிகு சக்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அகற்ற கூடாது என்பதற்காக, தனக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக எடுப்பதற்கு அறநிலையத்துறை முயற்சிப்பதாக கூறி தேசிய பட்டியலின ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்றும் சிவில் நீதிமன்றத்தின் உரிமையை ஆணையம் எடுத்துக்கொள்ள அதிகாரம் இல்லை என்பதால் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் , எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினர்.
பின்னர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 1 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court