உயர்நீதிமன்ற
மதுரை கிளையின் உத்தரவுப்படி தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது என குற்றச்சாட்டு கிளம்பியதால், தமிழகம் முழுக்க பரபரப்பு காணப்பட்டது.
இதுதொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பீலா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க -
Exclusive : தஞ்சை மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? - உண்மை அறியும் குழு விளக்கம்
அப்போது நீதிபதிகள் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். சிபிஐ விசாரணை நடத்தும் என்று கூறிய அவர்கள், இதனை கவுரவ பிரச்னையாக கருதக்கூடாது என்று தமிழக அரசுக்கு தெரிவித்தனர்.
இதையும் படிங்க -
Exclusive : ''தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல'' - உண்மை அறியும் குழு தகவல்
மேலும், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணையில் தலையிடுவது முறையாகாது என்று கருத்து கூறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.