அரசியல்வாதிகளுக்கு தொண்டை போய்விட்டால் தொண்டு போய்விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் "காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவ அறிவியல் மாநாட்டை தாய் மொழியில் நடத்துவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு இலவசமாக உட்காது செவி சுருள் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், குழந்தைகள் மத்தியில் காது கேளாமை அதிகளவில் அதிகரித்து வருவதாக கூறிய முதலமைச்சர், இதற்கு சுற்றுச்சூழல் மாசுபாடும் ஒரு காரணம் என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தொழில் படிப்புகளை தாய் மொழியில் படிக்கச் செய்ய அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணிகள் தொடங்கியிருப்பதாகக் கூறினார். மருத்துவம் என்பது எளிமையானதாகவும், அதிகம் செலவு இல்லாததாகவும் அமைய வேண்டும் என்றும் நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மருத்துவத்துறையில் தனியார் பங்களிப்பு மிக முக்கியம் என்று கூறிய முதலமைச்சர், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் என்பது ஏழைகளுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், எத்தகைய நோயையும் குணப்படுத்தும் வசதிகளுடன் மருத்துவத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், "எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு தொண்டை மிகமிக முக்கியம். தொண்டை போய்விட்டால் தொண்டே போய்விடும்.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, MK Stalin