தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வடகிழக்கு பருவமழை பருவத்தில் மழையின் அளவு கடந்த காலங்களை விட நன்றாக இருந்தது. வழக்கமாக பிப்ரவரி முதலே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி கடைசி வரை காலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்தது.
இந்நிலையில் மார்ச் மாதத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்த வெயிலின் அளவு தற்போது 100 ஃபாரன்ஹீட்டை தாண்டி வருகிறது. சேலம், கரூர், தருமபுரியில் வெயிலின் அளவு நூறை தாண்டிய நிலையில் பல மாவட்டங்களிலும் வெயிலின் அளவு நூறை நெருங்கி உள்ளது.
நாமக்கல், திருத்தணி, மதுரை, கோவையிலும் வெயிலின் அளவு அதிகமாக இருந்தது. சென்னையை பொறுத்தவரை இன்று வெயிலின் அளவு 92.3 ஃபாரன்ஹீட்டாக உள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 66.56 ஃபாரன்ஹிட் வெப்பமும் ஊட்டியில் 73.76 ஃபாரன்ஹிட் வெப்பமும் பதிவாகி உள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பதால் வரும் நாட்களில் பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடிக்கும் என்று கூறப்படுகிறது.