கடந்த 2006-2011
திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டால் தமிழகம் கடும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், மீண்டும் ஒரு மின்வெட்டு காலத்தை தமிழகம் தாங்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட். கோடைக்காலத்தில் இது 17 ஆயிரம் மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலம் தினமும் 4,320 மெகாவாட் வரை மின் உற்பத்தி நிகழ்கிறது. அனல்மின் நிலையங்கள் தடையின்றி இயங்க, நிலக்கரி அவசியம்.
அனல்நிலையங்களில் 14 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வட சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகலாம் என்னும் அச்சம் தொழிற்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சுழ்ந்துள்ளது.
கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டால், தமிழகத்தின் விவசாயமும் தொழிற்துறையும் மருத்துவ சேவைகளும் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாகின. கோவை, திருப்பூர், கரூர், சிவகாசி போன்ற தொழில் நகரங்களின் பொருளியல் சிதைவுக்குள்ளாகின. பல தொழில் நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டன. மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக் கூடாது.
பொருளாதார மந்தநிலையாலும், கொரோனா பெருந்தொற்றினாலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வினாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பண்டிகைக் கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகிவருகிறார்கள். மருத்துவமனைகளுக்கும் விவசாயிகளுக்கும் தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம். இந்த சூழ்நிலையில், மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது.
இதையும் படிங்க: சீனாவை போல் இந்தியாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு!
தமிழக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, அனல் மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்: 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.