தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த முறை காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறைகள் மீதான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வரலாற்றில், முதல் முறையாக காகிதம் இல்லாத இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது. இந்த பட்ஜெட் புதுமையான திட்டங்களும், முன்னேற்ற திட்டங்களும் எதுவும் இல்லாத வழக்கமான பட்ஜெட்டாக தான் இருக்கிறது.
Also read: TN Budget 2021: அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி!!
பட்ஜெட்டில் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையை பற்றியும் தெளிவான விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை. மக்கள் மீது புதிய வரிகள் சுமத்துவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது போல் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அம்மா உணவகத் திட்டத்தை, தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெற வில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியை விட்டு போகும் போது ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது என அதிமுக கூறியிருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது என கூறுவதில் இருந்து, பட்ஜெட் வாசிப்பது என்பது சடங்காக தான் இருக்கிறதே தவிர, சரித்திரமாக இன்னும் மாறவில்லை என்பது தெள்ள தெளிவாகிறது.
இனிவரும் காலங்களிலாவது பட்ஜெட் என்பது சரித்திரமாக மாற வேண்டும். பட்ஜெட் வாசிப்பவர்கள் ஆண்ட கட்சியை குறை சொல்வதும், நிதிப்பற்றாக்குறையில் உள்ளதாகவும், கடனில் விட்டு சென்றதாகவும், கூறுவதில் இருந்தே வழக்கமான பட்ஜெட்டாகத்தான் இதனை பார்க்க முடிகிறது.
தமிழகத்தின் கடன் சுமைக்காக நாளொன்றுக்கு வட்டி மட்டுமே சுமார் 87 கோடி செலுத்தி வருவதாகவும், இந்த வட்டி சுமை இல்லையென்றால் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற பல புதிய திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வர முடியும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை தான் தமிழக மக்களும் எதிர்ப்பார்க்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், பெட்ரோல் மீதான வரியில், தற்போது 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 ரூபாய்க்கு கீழ் பெட்ரோல் விலை குறைந்துள்ளதாகவும், இது சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதால் பெட்ரோல் விலை குறைப்பை தேமுதிக வரவேற்கிறது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அறிவித்துள்ளததை தேமுதிக வரவேற்கிறது. எனவே இந்த பட்ஜெட் பெரிய அளவிலான வரவேற்பும் இல்லாமல், குறை சொல்ல முடியாமலும் நடுநிலையான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. எனவே, இது வழக்கமான சம்பிரதாய பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.