அருணாச்சல பிரதேசத்தில் நேற்று இரவு, திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. பாங்கின் பகுதியின் வடகிழக்கே 305 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, அரசு தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, பிரதமர் மோடி இன்று மாலை பதில் அளிக்கிறார். பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றிற்கு பதிலளிக்கும், விதமாக இன்று மாலை மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அலுவலகங்களில் தொற்று தடுப்பு விதிகளை பணியாளர்கள் பின்பற்றுவதை, துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
Also Read: மிஸ் தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டூ கெதர்.. யூத் வேடத்தில் ஏமாற்றிய 56வயது போலீஸ்காரர்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற, 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். சம்பா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தலா ஒரு கிலோ எடையிலான போதைப்பொருளை கொண்ட 36 சிறிய ரக பைகளை பறிமுதல் செய்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து, பாகிஸ்தான் பணம், துப்பாக்கி மற்றும் கூடுதல் தோட்டாக்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியதாக, எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.லூதியானாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தற்போதைய முதலமைச்சர் சரண்ஜித் சன்னியை வரும் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Also Read: நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் டவுசர் கொள்ளையர்கள்.. அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்
ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிக்கு, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா தொற்றுக்கு எதிரான நாட்டின் போரினை இந்த தடுப்பூசி மேலும் வலுப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்
புதுச்சேரி வந்த அரசு பேருந்தில் 4 மாத ஆண் குழந்தையை பயணி ஒருவரிடம் கொடுத்துவிட்டு, மாயமானவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற பேருந்தில் கைக்குழந்தையுடன் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து கல்பாக்கம் வந்ததும் அருகில் இருந்த பயணி ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு அவர் இறங்கி மாயாமாகியுள்ளார். இதையடுத்து, அந்த குழந்தை மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஜெர்மனியின் North Rhine-Westphalia மாகாணங்களுக்கு இடையே Wilnsdorf என்ற இடம் அருகே 70 அடி உயரத்தில் Autobahn என்ற பாலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. 55 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை வெடிக்க வைக்க 120 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. ஆயிரத்து 850 துளைகளில் வெடிமருந்து நிரப்பப்பட்டு, பாலம் நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டது. பாலத்தின் 16 பகுதிகள் திட்டமிட்டபடி சரிந்து விழுந்தன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்களை நேரடியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், சில கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து வருவதால், தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள சுமை தூக்கும் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், நெல் மூட்டைகளை விற்க முடியாமல் 4 ஆவது நாளாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த 5 பேர் குழு விசாரணையை தொடங்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines, Lata Mangeshkar, Modi, Pudhucherry, Punjab, Tamil News